லாக்கப் மரண வழக்குகளின் தற்போதைய நிலவரம் என்ன ... த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

 
 தவெக
 


 
சிவகங்கை  மாவட்டத்தில்  திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணிபுரிந்தவர்  அஜித்குமார்.  நகை திருட்டு புகாரில் 2025 ஜூன் 27 அன்று காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மர்மமான முறையில் உயிரிழந்தனர். காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில்  “அஜித்குமார் காவலர்களிடமிருந்து தப்ப முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு வந்து உயிரிழந்தார்”  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில், அஜித்தின் உடலில் 18 க்கும் மேல்  கடுமையான காயங்கள் இருப்பது தெரியவந்தது எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்ட ஐந்து காவலர்கள்—சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சங்கரமணிக்கண்டன், ராமச்சந்திரன், பிரபு மற்றும் ஆனந்த்—2025 ஜூன் 30 அன்று கைது செய்யப்பட்டனர்.   ஒரு தலைமைக் காவலர் உட்பட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு பேசுபொருளாக வெடித்திருக்கும்  நிலையில்,  இந்த வழக்கு குற்றப்புலனாய்வுத் துறைக்கு  மாற்றப்பட்டு, முழுமையான தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில், த.வெ.க தலைவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

விஜய்

இது குறித்து அவர் தனது பதிவில்  ” திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்! அஜித்குமார் காவல் மரண வழக்கில் மக்கள் மனத்தில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எந்த அளவிற்குக் கொடூரமாக, மனிதாபிமானம் அறவே அற்று, சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக, தமிழக உள்துறை அமைச்சர்  ஸ்டாலின் அவர்களது நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் காவல் துறை நடந்துகொள்கிறது இச்சம்பவம், வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தமிழக அரசு, முதலில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சித்தது.  தவெக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்குப் பிறகும், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தலையீட்டிற்குப் பிறகும் தான் காவல் துறை தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது என்பதை நாடறியும். இந்த ஆட்சியின் போது நடந்த பல்வேறு காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை இந்த அரசு பெற்றுத் தந்துள்ளதா?

கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு உள்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும். அஜித்குமார் காவல் மரண வழக்கில் காவல் துறையினரே கொலைக் குற்றவாளிகள் என்பதால், இதனைத் தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால், விசாரணை நியாயமாக நடைபெறாது.  அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, விரைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

அது போலவே இந்த வழக்கிலும் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும். இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என உள்துறை அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும். இல்லையேல் பாமர மக்களை வதைக்கும் அதிகார துஷ்பிரயோக மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான இந்த அராஜக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வரலாற்றில் திமுக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனவும் தன்னுடைய பதிவில் கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது