பங்குனி உத்திரம் எப்போது? என்ன செய்து வழிபட வேண்டும்? முழு பலன்கள்!
பங்குனி மாதம் தமிழ் மாதத்தின் கடைசி மாதம். பங்குனி மாதம் முழுவதுமே இறை வழிபாட்டுக்குரிய மாதம். அதிலும் உத்திரம் நட்சத்திரம் மிகவும் விசேஷமானது. பங்குனியில் தான் முருகன் தெய்வானை திருக்கல்யாணம், பரமேஸ்வரன் பார்வதி திருக்கல்யாணம், வள்ளி, ஐயப்பனின் அவதார தினம். அனைத்து சிவ ஆலயங்களிலும் பங்குனி உத்திர திருநாள் சிறப்பாக கொண்டாடப்படும். பங்குனி உத்திர திருநாளில் தான் சிவபெருமான் சுந்தர மூர்த்தி நாயனாருக்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்தார் என்பது ஐதிகம்.

இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல ஆலயங்களில் பிரம்மோற்சவம் நடைபெறும். முருக பக்தர்கள் பால்குடம் சுமந்தும் காவடி எடுத்தும் அலகு குத்தியும் வழிபாடு நடத்துவர். நடப்பாண்டை பொறுத்தவரை ஏப்ரல் 4ம் தேதி பங்குனி உத்திரம் என சில நாட்காட்டிகளிலும், ஏப்ரல் 5ம் தேதி தான் பங்குனி உத்திரம் என சில நாட்காட்டிகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் இதனை எப்போது அனுசரிக்க வேண்டும் என பக்தர்களிடையே பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இது குறித்து சாஸ்திரிகளிடம் கேட்டறிந்த போது விரிவான விளக்கம் அளித்தார். அதன்படி பஞ்சாங்கங்களில் ஒன்றும், நாட்காட்டிகளில் ஒன்றும் குறிப்பிடப்பட்டிருப்பதால் இந்த திருவிழா குறித்த குழப்பம் நீடிக்கிறது. திருவிழாவின் தாத்பரியம் அறிந்து கொண்டாலே போதும். எந்த நாளில் கொண்டாட வேண்டும் என்கிற குழப்பம் வராது.

தமிழர் திருவிழாக்களை பொறுத்தமட்டில் சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் என பௌர்ணமியும், நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் தான் கொண்டாடப்படும். அந்த நாளில் விரதத்தை கொண்டாடுவது தான் சிறப்பு. அந்த வகையில் பங்குனியில் உத்திர நட்சத்திரம் ஏப்ரல் 4ம் தேதி காலை 10.17க்குத் தொடங்கி ஏப்ரல் 5 ம் தேதி பகல் 11.58 வரை நீடிக்கிறது. இதனால் பலரும் ஏப்ரல் 4ம் தேதியே பங்குனி உத்திரம் எனக் குறிப்பிடுகின்றனர். ஆலயங்களை பொறுத்தமட்டில் சில சிவாலயங்களிலும் ஏப்ரல் 4ம் தேதியே பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. பௌர்ணமியும் இணைந்து வர வேண்டும் என்கிற அமைப்பையும் கணக்கிடும் போது 4ம் தேதி முழுவதும் சதுர்த்தசி மட்டுமே உள்ளது. 5ம் தேதி தான் பௌர்ணமி வருகிறது. பௌர்ணமியோடு சேர்த்து உத்திர நட்சத்திரமும் வருகிறது. இதனால் ஏப்ரல் 5ம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடுவதே சிறப்பு. வீடுகளில் ஏப்ரல் 5ம் தேதி பௌர்ணமியோடு கூடிய உத்திர நட்சத்திர நாளில் கொண்டாடுவதே சிறப்பு எனக் கூறுகிறார். பங்குனி உத்திர திருநாளில் குலதெய்வத்தை வழிபடுவதும் மேலும் நல்ல நற்பயனைப் பெற்றுத் தரும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
