அதிர்ச்சி... கணவன் திட்டியதால் மகனை கொன்று தாய் தற்கொலை!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் போரபண்டா பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் முரளிவேணு என்பவரது குடும்பத்தில் ஏற்பட்ட சிறிய தகராறு, தற்போது பெரும் துயரத்தில் முடிந்துள்ளது. கடந்த 13-ஆம் தேதி முரளிவேணுவின் மனைவி சத்யவாணி, சமையல் எரிவாயு அடுப்பில் வெந்நீர் வைத்துள்ளார். இதைப் பார்த்த முரளிவேணு, நாடு முழுவதும் சமையல் எரிவாயு உருளைகளுக்குத் தட்டுப்பாடு நிலவும் வேளையில், எதற்காக அடுப்பைப் பயன்படுத்தினாய் என்று மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படவே, முரளிவேணு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

கணவர் திட்டியதால் மிகுந்த மனவேதனை அடைந்த சத்யவாணி, தனது 5 வயது மகன் மற்றும் 2 வயது மகளின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளார். இதில் இரண்டு குழந்தைகளும் மயங்கி விழுந்ததைக் கண்டு, அவர்கள் இறந்துவிட்டதாகக் கருதிய சத்யவாணி, அதே அறையில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்குத் திரும்பிய முரளிவேணு, தனது மனைவி சடலமாகத் தொங்குவதைக் கண்டு கதறி அழுதார்.

மயங்கிய நிலையில் கிடந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, 5 வயது சிறுவன் ருத்ராம்ஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 2 வயது பெண் குழந்தை தன்விகாவுக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சிறிய குடும்பத் தகராறு, ஒரு தாயையும் மகனையும் காவு வாங்கியுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
