தலைதீபாவளிக்கு வந்த புதுமணப்பெண் ஓட ஓட விரட்டிக் கொலை... வாலிபர் வெறித்தனம்!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலைதீபாவளிக்கு வந்த புதுமணப்பெண் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுமணப்பெண்ணைக் குத்திக்கொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சாதரக்கோன்விளையைச் சேர்ந்தவர் சிவன். இவருடைய மகன் கோவிந்தன் (21). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது படுக்கப்பத்து பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது நண்பரை பார்ப்பதற்காக சாதரக்கோன்விளைக்கு வந்து கோவிந்தனிடம் முகவரி கேட்டு வந்துள்ளார்.
இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முகவரி கேட்ட வாலிபரை கோவிந்தன் சத்தம் போட்டு விரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வாலிபர் படுக்கப்பத்தில் உள்ள தனது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்களுடன் சாதரக்கோன்விளையில் உள்ள கோவிந்தனின் வீட்டுக்கு சென்றனர். அப்போது கோவிந்தன் வீட்டில் இல்லை, அவருடைய குடும்பத்தினர் மட்டுமே இருந்துள்ளனர். இதனால் படுக்கப்பத்தில் இருந்து வந்தவர்கள் திரும்பி சென்றனர்.
தொடர்ந்து நேற்று காலையில் படுக்கப்பத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் சாதரக்கோன்விளைக்கு வந்தனர். அப்போது சாதரக்கோன்விளையைச் சேர்ந்த போர்வெல் அமைக்கும் தொழில் செய்து வரும் பெருமாள் மகன் மணிகண்டனை (40) சமரசம் பேசுவதற்காக அழைத்து வந்தனர்.
கோவிந்தன், அவருடைய தந்தை சிவன் ஆகியோரை வரவழைத்து மணிகண்டன் சமரசம் பேசினார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மணிகண்டன், சிவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தன் வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து மணிகண்டனை வெட்டினார். இதனால் சமரசம் பேச வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
படுகாயமடைந்த மணிகண்டனை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. இதையடுத்து கோவிந்தன், சிவன் ஆகியோர் குலசேகரன்பட்டினம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். கோவிந்தனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் கோவிந்தனின் தங்கை முத்துலட்சுமிக்கும் (19), அழகப்பபுரத்தை சேர்ந்த வெயிலுமுத்துவுக்கும் திருமணம் நடந்தது. தலைதீபாவளி கொண்டாடுவதற்காக முத்துலட்சுமி கணவருடன் சாதரக்கோன்விளையில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு தனது கணவருடன் வந்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் வினியோகம் செய்வதற்காக முத்துலட்சுமி சென்றார். அப்போது அங்கு வந்த மணிகண்டனின் தம்பியான தாஸ் என்ற வாலிபர் முத்துலட்சுமியை ஓட ஓட விரட்டி கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த முத்துலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தாஸை வலைவீசி தேடி வருகின்றனர். தலை தீபாவளி கொண்டாட வந்த புதுமணப்பெண் கொடூரமாக குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!